ஞாயிறு, 21 நவம்பர், 2010


| 25 comments | Tuesday, November 16, 2010
|

ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப்படித் தான் ஆரம்பித்தது இன்றைய நாளும். பியானோ இசைக்கிறது, மெல்ல மெல்ல அந்தப் பியானோ இசை தன் ஓட்டத்தை நிறுத்த முயலும் போது ஊடறுத்து வருகின்றது "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்" இசைக்குயிலின் குரலைக் கேட்டுப் புழகாங்கிதம் அடைந்த தோரணையில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆர்ப்பரிப்போடு பியானோ இசை சேர, இந்த முறை சாக்ஸபோனும், கூடவே மெல்லிசை மன்னரின் தனித்துவமான வாத்திய அணிகளான கொங்கோ தாள வாத்தியம் அமைக்க, மற்ற இசைக்கருவிகளும் அணி சேர்க்கின்றன.
உன்னை ஒன்று கேட்பேன் என்று சுசீலா வரிகளுக்கு இலக்கணம் அமைக்கையில் உற்றுக் கேட்டுப் பாருங்கள் கூடவே ஒரு வயலின் அதை ஆமோதிப்பதைப் போல மேலிழுத்துச் செல்லும்.
"தனிமையில் வானம்" "சபையிலே மெளனம்" என்று ஒவ்வொரு ஹைக்கூ வரிகளுக்கும் இடையில் கொங்கோ வாத்தியம் இட்டு நிரவியிருக்கும் அந்த இடைவெளியை.
இந்தப் பாடல் ஒன்றே போதும் மெல்லிசை மன்னர் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துக் காட்ட



இருள் சூழந்ததும் கொல்லையில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது கூடவே அண்ணனோ, அம்மாவோ துணைக்கு வரவேண்டிய சிறு பருவம் அது. அந்த நேரத்தில் நிகழ்ந்து நினைவில் ஒட்டாத நினைவுகள் ஏராளம். ஆனால் தசாப்தங்கள் பல கழிந்தும் இன்னும் மனதில் தார் போல ஒட்டிக் கொண்டிருக்கும் நினைவுகளில் அடிக்கடி மீண்டும் மழைக்குப் பூக்கும் காளான் போலத் துளிர்த்துப் போவது " அத்தா.....ன் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படி சொல்வேனடி" இலங்கை வானொலியின் இரவின் மடியில் நிகழ்ச்சியில் சுசீலா கிசுகிசுக்கிறார்.

அப்படியே வெட்கம் குழைத்த குரல் அதில் தொக்கி நிற்கும் சேதிகள் ஆயிரம் சொல்லாமல் சொல்லும். இங்கேயும் இசைக்குயில் சுசீலாவுக்கு மாற்றீடைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "கிறுக்கா", "லூசுப்பையா" என்றெல்லாம் ஏகபோக உரிமை எடுத்துப் பாடும் இந்த நாள் அதிரடிப்பாடலுக்கு முழு நேர்மறை இலக்கணங்களோடு நாணம் கலந்து குழைத்த மெட்டு. குறிப்பா முதல் அடிகளைச் சுசீலா பாடிய ஒரு நிமிடம் கழித்து வரும் இடையிசையைக் கேளுங்கள் அப்படியே குறும்பு கொப்பளிக்குமாற்போலச் சீண்டிப்பார்க்கும் இசை. "அத்தான் என்னத்தான்" மாலை நேரத்து வீட்டு முற்றத்தில் ஈரும் பேனும் எடுக்கையில் நம்மூர்ப்பெண்கள் முணுமுணுத்துப் பாடியதை அரைக்காற்சட்டை காலத்தில் கேட்ட நினைவுகள் மங்கலாக.



பாடல்கள் மீது நான் கொண்ட நேசத்தை மட்டும் புரிந்து கொண்டவர்கள் தமது உறவினர்களின் வீட்டுத் திருமணங்களுக்கு அணி சேர்க்க என்னிடம் திருமணப்பாடல்களைச் சேகரித்துத் தருமாறு கேட்பார்கள். அப்போது நான் ஏதோ ஒரு இயக்குனர் இசையமைப்பாளர் ஒருவரிடம் சிச்சுவேஷன் சாங் போடுங்க என்று கேட்ட தோரணையில் அதீத ஆர்வம் மேலிடப் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் கொடுப்பேன். ஆனால் "இதெல்லாம் சரிவராது, நல்ல குத்துப்பாட்டு ரெக்கார்ட் பண்ணித் தாருங்கள்" என்று என் தொகுப்பை நிராகரிக்கும் போது அங்கீகரிக்கப்படாத புது இசையமைப்பாளரின் உணர்வோடு மனதைத் தொங்கப் போடுவேன். ஆனால் சிலபாடல்கள் நான் ரசிக்க மட்டுமே என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பதுண்டு. அந்த ரகமான பாடல் தான் இது.
"வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி" என்று நிதானித்து ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்க ஆரம்பியுங்கள். அப்படியே பிரமாண்டமானதொரு மனம் ஒருமித்த கல்யாண வீட்டை உங்கள் மனம் மெல்ல மெல்லக் கட்டத் தொடங்கும். ஒவ்வொரு வரிகளும் அந்தக் காட்சிப்புலத்தை உணர்ந்து பாடும் வரிகளாக அழுத்தமாகப் பதித்திருப்பார் இசையரசி பி.சுசீலா.
இங்கும் வழக்கமான எம்.எஸ்.வியின் ஆவர்த்தனங்கள் தான், ஆனால் மணமேடையின் காட்சிப்புலத்துக்கு இயைவாக ஒலிக்கும் நாதஸ்வர மேள தாளங்கள் பொருந்திப் போகும் இசைக் கூட்டணி.



"காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி " மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நீங்கள் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது என்பது எனக்குத் தெரியும், அதைப் போல நான் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாடலை அதிகம் கேட்டு நான் வளரக்காரணம் சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன "நேயர் விருப்பம்" நிகழ்ச்சி. ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் "காத்திருந்த மல்லி மல்லி" என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான்.
ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா? (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)
இந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்
"ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ" (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.



இந்த நான்கு முத்தான பாடல்களுமே போதும் என்று நினைக்கிறேன் பி.சுசீலாவின் குரல் ஏன் எனக்குப் பிடிக்கும் என்று.

அனுராதா ரமணனின் "சிறை" - ஒலிப்பகிர்வு

| 10 comments | Thursday, May 20, 2010
|

பிரபல தமிழ் இலக்கியப்படைப்பாளர் அனுராதா ரமணன் அவர்கள் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி மாரடைப்பால் அகால மரணமானது அவரது எழுத்துக்களை நேசித்தவர்களுக்கும் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்து விட்டது. சிறுகதை, நாவல் என்ற எல்லைகளைக்கடந்து தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளையும், வாசகர் கேள்வி பதிலுக்கு அவர் தந்த ஆறுதல் பகிர்வுகளுமாக இவரது எழுத்துப்பணி விசாலமடைந்திருந்தது எல்லோரும் அறிந்த ஒன்று.

இவரது நாவல்களில் ஒரு மலரின் பயணம், அம்மா, சிறை, கூட்டுப்புழுக்கள் போன்றவை திரைப்படங்களாகவும் பிறப்பெடுத்தன. சிறை திரைப்படத்தினை நாவலின் சாரம் கெடாமல் இயக்கியிருந்தார் ஆர்.சி. சக்தி. லட்சுமி, பிரசன்னா, ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்க இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துச் சிறப்பித்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஒலிபரப்புத்துறையில் 15 வருஷங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த எமது சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சிவாஜினி சச்சிதானந்தா அவர்கள் அனுராதா ரமணன் அவர்களது எழுத்துக்களை நேசிப்பவர். கடந்த மே 13 ஆம் திகதி தனது வானொலிப் படைப்பில் "திரையில் புகுந்த கதைகள்" என்ற பகுதியில் தான் நேசிக்கும் அனுராதா ரமணன் குறித்தும், அவரைச் சந்தித்த அந்தக் கணங்களை சுவாரஸ்யமான நனவிடை தோய்தலைத் தந்தவாறே, திரையில் காவியமான "சிறை" திரைப்படத்தின் பகிர்வையும் அந்தப் படத்தில் இடம்பெற்ற முத்தான இரண்டு பாடல்களோடு பகிர்ந்து கொண்டார். மூன்று நாட்களின் பின் தன்னுடைய ஆதர்ஷ எழுத்தாளர் இவ்வுலகை விட்டு நீங்குவார் என்று அப்போது நினைத்திருப்பாரா என்ன.
அந்த ஒலிப்பகிர்வை இங்கே உங்கள் செவிகளுக்கு விருந்தாகத் தருகின்றேன்.
ஒலிப்பகிர்வைத் தயாரித்துப் பகிர்ந்து கொண்ட திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவுக்கு எமது நன்றிகள்.


காதலர் தினம் 2010

| 15 comments | Saturday, February 13, 2010
|

காதலர் தினம் என்பது காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள். இந்தத் தினத்தைக் கேட்டாலேயே பதின்ம வயது நினைவுகள் அப்படியே மீண்டும் ஒரு சுற்று வரும். ஹலோ ஹலோ ஓடாதீங்க, இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை ;)

வானொலியில் "காதலர் கீதங்கள்" என்ற நிகழ்ச்சியை 6 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்திருக்கின்றேன். குறிப்பாக மு.மேத்தா போன்றோரின் கவிதைகளை நறுக்கிச் சிலவரிகளை மட்டும் சொல்லி அதற்குப் பொருந்துமாற்போலப் பாடல்களைப் பகிர்வேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு தீம் வைத்துச் செய்திருப்பேன. எனவே காதலர் கீதங்களைப் பகிர்வது என்பது எனக்கு இன்னும் அலாதியான விருப்பு. அந்த வகையில் காதலர் தினம் 2010 சிறப்புப் படையலாக இங்கே வைரமுத்து எழுதிய காதல் கவிதைகளையும் எனக்குப் பிடித்த சில காதல் பாடல்களையும் பகிர்கின்றேன். காதலனாகவும் கவிஞனாகவும் இருந்ததால் வைரமுத்து அணு அணுவாகப் பிளந்து காதலைக் காதலித்து எழுதிய மணியான வரிகள் அவை.
















காதலித்துப் பார்!




உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!

டூயட் திரைப்படத்தில் இருந்து "கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?"



கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சத்தங்கள் நீயா?
என்னைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
என்னைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதற் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணுகின்ற ஒளிவட்டம் நீதான்!
என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!
வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்!
என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சு நீதான்!
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான்!
காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்ததால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்




அடுத்து இருவர் படத்திற்காக வைரமுத்து குழைத்த காதல் வரிகள்



உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள்
தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய்
இதயத்தில் கணக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லாயிடங்களில் முத்தங்கள்
விதைத்த மோகத்தில் சில நிமிடம் (உன்னோடு)

எது ஞாயம் எது பாவம்
இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதை பற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை

அச்சம் கலைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன்
வெட்கத்தை நீ அணைத்தாய்

கண்டதிரு கோலம்
கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர்
கையிலின்னும் ஒட்டுதடி

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே






















அடுத்து என்னை ஆட்கொண்ட சில காதல் பாடல்களைப் பகிர்கின்றேன்.


முதலில் வருவது "படித்தால் மட்டும் போதுமா" திரைப்படத்தில் இருந்து "பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை" (குரல்கள்: பி.பி சிறீனிவாஸ், டி.எம்.செளந்தரராஜன்)



அடுத்து வருவது "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படத்தில் இருந்து "காதல் ஓவியம் பாடும் காவியம்" (குரல்கள்: இளையராஜா, ஜென்சி)



"நலம் நலமறிய ஆவல்" ஒலிப்பது "காதல் கோட்டை" திரையில் இருந்து (குரல்கள்: கிருஷ்ணராஜ், அனுராதா சிறீராம்)



நிறைவாக "என்ன விலை அழகே" கேட்கும் "காதலர் தினம்" (குரல்: உன்னி மேனன்)



ரஜினி 60 - சிறப்பு "பா"மாலை

| 26 comments | Saturday, December 12, 2009
|


ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.

மலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.

சினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் இருந்திருக்கின்றன. அதில் ரஜினி என்ற தனி மனிதனும் விதி விலக்கல்ல. ஆனால் தான் சினிமாவில் வகுத்துக் கொண்ட பாதையை சீராக வைத்துக் கொண்டு அதிலிருந்து இம்மியும் பிசகாமல்
பயணிக்கின்றான் இந்தக் கலைஞன். எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.

ஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் நானும்.
மன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வில் இருந்து எழுப்பி நின்று நிமிரவும் இவர் படங்கள் டாக்டர் கொடுக்காத மருந்து வகைகள்.

எஸ்.பி முத்துராமன் போன்ற இயக்குனர்களின் நடிகனாக இருந்த ரஜினி பின்னாளில் தனக்கான கதை, பாத்திரம் என்பதை வடிவமைக்கும் அளவுக்கு உரிமை எடுக்கக் காரணம் தன்னை நேசிக்கும் ரசிகனைப் பூரண திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.

இன்று இந்தியாவின் குமரி முதல் இமயம் வரை தெரிந்த பிரபலம் என்ற அந்தஸ்து இருந்தாலும், தன் தலையில் கர்வத்தை இமயம் வரை ஏற்றாத கலைஞர் இவர்.

ஆண்டுகள் அறுபதைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு நான் தருகிறேன் "பா"மாலை. இவை ரஜினியோடு இது நாள் வரை பணியாற்றிய ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் இசையில் இருந்தும் கோர்த்த முத்துக்கள்.

முதலில் வருவது இசைஞானி இளையராஜா இசையில் முரட்டுக் காளை படத்தில் இருந்து "பொதுவாக என் மனசு தங்கம்"



அடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "போக்கிரி ராஜா" திரையில் இருந்து "போக்கிரிக்கு போக்கிரி ராஜா"



சந்திர போஸ் இசையில் வரும் இந்தப் பாடல் "ராஜா சின்ன ரோஜா" திரையில் இருந்து "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா"



இசைப்புயல் ரஹ்மானோடு "முத்து"வாக் கைகோர்த்து "ஒருவன் ஒருவன் முதலாளி


இந்த பால்காரனுக்கு பால் கறக்கவும் தெரியும் பாசம் கலந்து கொடுக்கவும் தெரியும், அண்ணாமலைக்கு இசை கொடுக்கிறார் தேவா. வந்தேண்டா பால்காரன்



"ஹலோ ரஜினி மாமா, உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா" , நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று தமிழ் மாறிய அம்சலோகா இசையில்



தேவுடா தேவுடா என்று இடைவேளைக்குக்குப் பின் வந்து ஒரு வருஷம் ஓட வைத்தார் சந்திரமுகியில். இசை வித்யாசாகர்.



"தேவாமிர்த"மாய் ஒலிக்கும் இந்தப் பாடல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அலெக்ஸ் பாண்டியனைக் காட்டிய மூன்று முகம் திரையில் இருந்து



பாடும் நிலா பாலு சூப்பர் ஸ்டாருக்கு மெட்டுக் கட்டிய "துடிக்கும் கரங்கள்" படத்தில் இருந்து "சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்"



"தப்புத் தாளங்கள்" பாணியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த அந்தப் படத்தில் இருந்து விஜயபாஸ்கர் பாட்டுக் கட்டிய "என்னடா பொல்லாத வாழ்க்கை"



விஜய் ஆனந்த் என்ற இசையமைப்பாளருக்கு முகவரி ரஜினியின் "நான் அடிமை இல்லை" படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக "ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் ஒலிக்கின்றது"



இசையமைப்பாளர் கார்த்திக் ராஜவை அறிமுகப்படுத்திய பாடல் "பாண்டியனின் ராஜ்ஜியத்தில்



ஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் குசேலன் மூலம் ஒரு வாய்ப்பு "போக்கிரி ராஜா நீயும் பொல்லாதவன்"



ரஜினி ரசிகர்களின் பெரு விருப்பத்துக்குரிய பாடல் "ஆசை நூறு வகை" அடுத்த வாரிசில் இருந்து போனஸ் பாடலாக.



"தேவர் மகனில்" சிவாஜியையும், எத்தனையோ படங்களில் கமலையும், ஏன் சமீபத்தில் "பா"வில் அமிதாப்பையும் பாட வைத்த இசைஞானி இளையராஜா, ரஜினியை மட்டும் விட்டு விடுவாரா என்ன.
"அடிக்குது குளிரு" அது சரி சரி ;-)



நிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.

ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது

போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கை பாடங்களை
நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே

எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்

திறமை இருந்தால் மாலை இடு

இல்லை என்றால் ஆளை விடு





"மெல்லத் திறந்தது கதவு" பின்னணிஇசைத்தொகுப்பு

| 20 comments | Saturday, February 21, 2009
|

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்புதிரில் வந்திருந்த கேள்விக்கான பதிலாக அமைந்த மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை இங்கே நான் தருகின்றேன்.

இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற தமிழ் சினிமாவின் இரு சகாப்தங்கள் சந்தித்த முதல் படமே மெல்லத் திறந்தது கதவு என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். இவர்கள் இருவரும் பின்னாளில் இரும்பு பூக்கள், என் இனிய பொன் நிலாவே, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன் என்று சில படங்களில் இணைந்திருந்தாலும் இந்த இசைக் கூட்டணியின் உச்ச பட்ச சிறப்புமே மெல்லத் திறந்த கதவு திரைப்படத்தில் தான் வெளிப்பட்டது என்பேன்.

ஏவிஎம்மின் தயாரிப்பில் 1986 ஆம் ஆண்டில் அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் மோகன், ராதா, அமலா போன்றவர்கள் நடிக்க வெளியானது இப்படம். மோகனின் தந்தையாக பிரபல இசையமைப்பாளர் ஜி.கே வெங்கடேஷ் நடித்திருக்கின்றார். பின்னர் இளையராஜாவின் தயாரிப்பில் வெளியான சிங்காரவேலனிலும் ஜி.கே.வெங்கடேஷ் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் பாடல்கள் சிறப்பாக இருந்த அளவுக்கு சிறந்த கதை, மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் அமையாதது பெருங்குறை. இரு இசை மாமேதைகளை வைத்துப் பண்ணும் படத்தினை முழுமையான இசையைப் பின்னணியாகக் கொண்ட கதையாகவே பின்னியிருக்கலாம். இந்த குழப்பங்களால் மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் வெற்றி மிகப் பிரமாதம் என்று அமையவில்லை.

பாடல்களை வாலி மற்றும் கங்கை அமரன் எழுத, குழலூதும் கண்ணனுக்கு பாடல் தவிர்ந்த மற்றைய பாடல்களுக்கு எம்.எஸ்.வி மெட்டுப் போட இளையராஜா இசையமைத்திருக்கின்றார். குழலூதும் கண்ணனுக்கு பாடலுக்கு மெட்டும் இசையும் ராஜாவே.

இப்படத்தின் பின்னணி இசையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் எம்.எஸ்.விஸ்வநாதனின் கைவரிசையும் இருந்திருக்கிறது. அதைக் கேட்கும் போது அவதானித்துக் கீழே தந்திருக்கிறேன். தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தின் பின்னணி இசையை அனுபவியுங்கள்.



படத்தின் ஆரம்ப இசை



ராதா-மோகன் முதல் சந்திப்பு, புல்லாங்குழலில் குழலூதும் கண்ணனுக்கு இழையோட



"அழகுராணி பொண்ணு" நாட்டுப்புறப்பாடலைப் பாடும் கிராமத்துப் பெரிசு



"மரிக்கொழுந்து வாசக்காரி" நாட்டுப்புறப்பாடலைப் பாடும் கிராமத்து ஆள்



மோகன் நினைப்பில் ராதா பின்னணியில் ஊருசனம் தூங்கிருச்சு பாடலின் இசை கீபோர்டில் பரவ



ராதா, மோகன் சந்திப்பும் ராதா தன் தங்கை மேல் கொள்ளும் பொறாமையும், இதிலும் குழலூதும் கண்ணனுக்கு பாட்டின் இசை பரவி இன்னொரு தடத்துக்கு மாறுகின்றது



"ஒரு ஆம்பளப்பையன் பாத்து சிரிச்சானாம்" படத்திற்காக மேலதிகமாகப் போட்ட மெட்டு



மோகன் குணமடைய வேண்டி ராதாவின் வேண்டுதல் கிராமிய மேளதாளம், உறுமி மேளம் கலக்க



மோகன் பிரிவில் ராதா, வயலின் இசையில் ஊரு சனம் தூங்கிருச்சு



ராதாவின் தாய் மரணம் , இந்தப் பின்னணி இசை எம்.எஸ்.வியின் உடையது என்பதை கேட்கும் போதே உணர முடிகின்றது



ராதா வாண்டுகளைப் பிரிந்து பட்டணம் புறப்படுதல், பின்னணியில் கிட்டாரில் சக்கரக்கட்டிக்கு பாடலின் இசை



"பாவன குரு" பாடல் படத்துக்காக மேலதிகமாகப் போடப்பட்ட மெட்டு



மோகன், அமலா சந்திப்பு பின்னணியில் வா வெண்ணிலா பாட்டினை இசையாக்கி மட்டும்



மோகன் தன் காதலை அமலா வீட்டில் ஹிந்திப் பாடம் மூலம் வெளிப்படுத்த, வா வெண்ணிலா பாட்டிசை இன்னொரு வடிவில்



காதலி அமலாவுக்காக மோகன் மழையில் நனைந்து நடந்து போதல், வயலினும் புல்லாங்குழலும் ஆர்ப்பரிக்க மெல்ல வா வெண்ணிலா மெதுவாகக் கலக்கின்றது



அமலாவின் காதல் நினைப்பில் வா வெண்ணிலா பாட்டிசையோடு மோகன் சந்திக்க "சிறகை விரித்து பறக்க பறக்க" பாடல் படத்துக்காக மேலதிகமாகப் போட்ட மெட்டு, பாட்டு முடிவில் வா வெண்ணிலா வயலினிசையில்



அமலா, மோகனின் காதலை ஏற்றல், காதலர்கள் மனமகிழ்வில் வா வெண்ணிலா பாட்டிசை இன்னொரு வடிவில்



அமலா மோகன் இறுதிச் சந்திப்பு நாள் காதல் பிரவாகம் இசையில் கலக்க



அமலா புதைகுழிக்குள் விழுந்து சாகும் அவல ஓசை



ராதாவின் தற்கொலை முடிவில் மோகனின் மனக் கதவு மெல்லத் திறக்க ஜோடி சேரும் இறுதிக் காட்சி



எம்.எஸ்.வி - சிவாஜி கூட்டு இசைப்படையல்

| 14 comments | Monday, September 8, 2008
|

கடந்த றேடியோஸ்புதிரில் ஒரு சம்பவத்தைக் கொடுத்து, குறித்த சம்பவம் மூலம் வந்த பாடலைக் கேட்டிருந்தேன். பலர் சரியான பதிலோடு வந்திருந்தார்கள். அந்த சம்பவக் குறிப்பு ராணி மைந்தன் எழுதிய "எம்.எஸ்.வி ஒரு சகாப்தம்" என்ற நூலில் இருந்து பெறப்பட்டதை நன்றியோடு சொல்லிக் கொண்டு அதனை மீண்டும் தருகின்றேன்.

கவிஞர் கண்ணதாசன் ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்காக "மதனமாளிகையில் மந்திர மாலைகளாம்" என்ற அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மனதைப் பறிகொடுத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு விதமான மெட்டுக்களைப் போட்டும் திருப்தி வரவில்லை. தான் போட்ட எட்டு டியூன்களையும் ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. அங்கே அப்போது கவிஞரும் இருந்தார்.

நடுவில் அனைவருக்கும் காபி வந்தது. காபியைக் கொடுத்த பையன் விஸ்வநாதனிடம், "அண்ணே அந்த மூணாவது ட்யூனையும், ஏழாவது ட்யூனையும் மிக்ஸ் பண்ணிப் பாருங்க" என்று இயல்பாகச் சொன்னான். அவன் சொன்னது கவிஞரின் காதிலும் விழுந்தது.
"போடா...டேய்...போடா...இது என்ன காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா...போ...உன் வேலையைப் பார்" என்று விரட்டினார் கவிஞர்.

அடுத்து விஸ்வநாதன் இன்னொரு ட்யூனை வாசித்தும், பாடியும் காட்டினார். "ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.எஸ்.வி அமைதியாக அந்த காபி கொண்டு வந்த பையனைப் பார்த்தார். கடைசியாக எம்.எஸ்.வி பாடி அனைவரும் ஏற்றுக் கொண்ட அந்த ட்யூன் காபி பையன் சொன்னது போல் மூன்றாவது ட்யூனையும் ஏழாவது ட்யூனையும் கலந்தது தான். அதுவே பின்னாளில் பாடலாகவும் உருவெடுத்தது.

நான் கொடுத்த உபகுறிப்புக்களில் சொன்ன அந்த நூல் நடிகர் சிவகுமார் எழுதிய "இதுராஜ பாட்டை அல்ல".

தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன் தனித்து இசையமைக்க ஆரம்பித்தபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அமைந்த ஜோடிப்பாடல்களோடு மெல்லிசை மனனர்க்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்த கொடி அசைந்ததும் மற்றும் அமைதியான நதியினிலே ஓடம் ஆகிய பாடல்களுடன் முத்துக்கள் பத்தாக வருகின்றன.

1.முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
படம்: நெஞ்சிருக்கும் வரை, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

2. பொட்டு வைத்த முகமோ கட்டிவைத்த குழலோ?
படம்: சுமதி என் சுந்தரி, பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா

3. பூ மாலையில் ஓர் மல்லிகை
படம்:ஊட்டி வரை உறவு, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

4. அமைதியான நதியினிலே ஓடம்
படம்: ஆண்டவன் கட்டளை,பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

5. கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
படம்: பார்த்தால் பசி தீரும், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
படம்: ராஜபார்ட் ரங்கதுரை, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

7. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
படம்: தங்கப்பதக்கம், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

8. இனியவளே என்று பாடி வந்தேன்
படம்: சிவகாமியின் செல்வன், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

9. நாலு பக்கம் வேடருண்டு
படம்: அண்ணன் ஒரு கோவில், பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

10. நினைவாலே சிலை செய்து
படம்: அந்தமான் காதலி, பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்


பாடகி & இயக்குனர் ஷோபா சந்திரசேகர்

| 8 comments | Sunday, July 13, 2008
|

நேற்றைய றேடியோஸ்பதி புதிரில் கேட்ட கேள்விக்கான பதில் ஷோபா சந்திர சேகர். அவரின் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கனவே நன்கு அறியப்பட்ட இயக்குனர் நீதியை வைத்து, நீதிதேவதையின் கண்ணைக் கட்டிக் காட்டும் காட்சி வந்த நிறையப் படங்களை இயக்கிவர் அவர். இன்னொரு குடும்ப உறுப்பினர் யாரென்று சொல்லவும் வேண்டுமா, கில்லி கில்லி, விஜய்;-)

ஷோபா சந்திரசேகர் தன் திருமணத்திற்கு முன் லலிதாஞ்சலி என்ற இசைக்குழுவினை, சகோதரர் பாடகர் எஸ்.என்.சுரேந்தர், சகோதரி ஷீலாவுடன் இணைந்து நடாத்தி வந்திருக்கிறார்.

எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் 1967 இல் வெளியான இருமலர்கள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக , ரி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்து "மகராஜா ஒரு மகராணி என்ற பாடலைப் பாடியிருக்கிறார். (தகவல் உதவி:ஆறாந்திணை)
அந்தப் பாடலைக் கேட்க:




திருமணத்தின் பின்னர் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் நிறையப் படங்களுக்கு கதாசிரியர், தயாரிப்பாளராக இருந்திருக்கிறார் இவர். 90 களில் ஆரம்பத்தில் நிறைய புதுமுக இயக்குனர்கள், நடிக நடிகர்கள் என்ற ஒரு ஒரு ட்ரெண்ட் முளைத்தது. அப்போது தான்
தானே இயக்கி 1991 இல் நீரஜ், மம்தா குல்கர்னி நடித்த "நண்பர்கள்" என்ற படத்தை முதலில் இயக்கினார். படத்தின் இசை: பாபு போஸ். படத்தின் பாடல்கள் வடநாட்டு மெட்டிலும் இசையிலும் கலக்கி படம் பெரிய ஹிட்டானது.
அந்தப் படத்தில் வரும் "என்னுயிரே என்னுயிரே" பாடலைக் கேட்க




நண்பர்கள் படத்தின் வெற்றியால் மீண்டும் நீரஜை நாயகனாக வைத்து, பர்வீன் என்ற நாயகியோடு, இசைஞானி இளையராஜாவின் இசையில் "இன்னிசை மழை" என்னும் படத்தைக் கொடுத்தார். பொதுவாகவே இசை, பாட்டு என்று படத்தலைப்பு வந்தால் பின்னி பெடலெடுக்கும் இளையராஜா எட்டுப் பாடல்களைப் போட்டுக் கொடுத்து அசத்தினார். பாடல்கள் பெரும் வெற்றி. ஆனால் பாடல்கள் நன்றாக இருந்து என்ன பயன். படம் மகா சொதப்பல். அதை தோல்விப் படமாக்கி ரசிகர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த, கஸல் பாணியில் வரும், சுரேந்தர், இளையராஜா பாடும் "மங்கை நீ மாங்கனி"




எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "வா வா மன்னவா"




எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "தெற்கே பிறந்த கிளி"


எம்.எஸ்.வி- இளையராஜா இணைந்த "என் இனிய பொன் நிலாவே"

| 28 comments | Monday, July 7, 2008
|

நேற்று றேடியோஸ்புதிர் 11 இல் கேட்ட கேள்விக்கான பதிலாக வருவது "என் இனிய பொன் நிலாவே" என்ற திரைப்படம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா கூட்டணியில் இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் பாண்டியராஜன், மெளனிகா ஆகியோர் நடித்தது இந்தப் படம். ஏற்கனவே பாலுமகேந்திரா தெலுங்கில் எடுத்த நிரீக்க்ஷணா (பின்னர் கண்ணே கலைமானே என்று தமிழில் மொழி மாற்றப்பட்டது), பின்னாளில் வந்த அது ஒரு கனாக்காலம் போன்ற படங்களின் சாயலினை ஓரளவு ஒத்திருக்கும் இந்தப் படம். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பத்து வருடங்களுக்கு மேல் பரணில் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தான் வெளியானது. படம் தொடங்கிய காலத்தில் பாண்டியராஜன் மிகப் பெரும் ஹீரோ. படம் வெளியான போது அவரைக் கடந்து ஒரு நடிகர் பட்டாளமே முந்தி விட்டது. பாலுமகேந்திராவைப் பொறுத்தவரை அவரின் அழியாத கோலங்கள், சந்தியாராகம் போன்ற படங்களைத் தவிர வேறு எந்தப் படத்திற்கும் இளையராஜா இல்லாமல் இசை வைத்ததில்லை.

இந்தப் படத்தின் பாடல்களைத் தேடித் தருமாறு கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு முன்னரே நண்பர் ஜீரா அன்புக் கட்டளை இட்டிருந்தார். இப்படப் பாடல்களைத் தேடுவது மகா சிரமமாய் இருந்தது. அண்மையில் ஒரு வீடியோகடையில் இப்படத்தின் விசிடி கிடைத்தது. அதிலிருந்து பாடல்களையும், பாடல்களின் வீடியோக்களையும் பிரித்தெடுத்து விட்டேன். வீடியோக்கள் பின்னர் வீடியோஸ்பதியில் வரும்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா கூட்டணியில் இன்னும் சில படங்கள் இசையமைத்து இந்தக் கூட்டணியின் பேர் சொல்லுமளவுக்கு இருந்தாலும் இந்த "என் இனிய பொன் நிலாவே" படப்பாடல்கள் என் கணிப்பில் சுமார் ரகம் தான். முதலில் கொடுத்திருக்கும் பாடல் மட்டும் ஓரளவு பரவாயில்லை. ஆனாலும் இந்த இருமேதைகளின் சங்கமத்தில் வந்த திரைப்படம். அதுவும் ஓசைபடாமலேயே போய்ச் சேர்ந்து விட்ட இந்தப் படத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் இப்படப் பாடல்களைத் தருகின்றேன்.

கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "தளிர்களில் பூக்கும்"




கே.எஸ்.சித்ரா பாடும் "சில்லென்ற மலரே"




எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் "பூ வேண்டுமே"




கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "காதல் நினைவே"




எல்.ஆர்.ஈஸ்வரி, மனோ பாடும் "புது கடலையின்னா கடலை"


நீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்

| 15 comments | Thursday, October 11, 2007
|



தமிழ்த் திரையிசை வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு சகாப்தம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். இந்த மிகப் பெரிய மீடியாவில் தன் காலூன்றுவதற்காக எத்தனையோ சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்த அவர், தொடர்ந்தும் நின்று நிலைக்க வேண்டி சாதித்துக் காட்டியவை எம்.எஸ்.வி அவர்கள் திரையிசையில் போட்ட பல்லாயிரம் மெட்டுக்கள் தான்.

காதல், வீரம், சோகம், நகைச்சுவை, கோபம், விரகதாபம், சிந்தனை, பொறாமை, வஞ்சனை, வெட்கம் என்று மனிதரது எத்தனையோ குணாதிசயங்களை எத்தனையோ வகை வகையான மெட்டுக்களால் வகைப்படுத்திக் காட்டியவர் இவர்.

பாரம்பரிய இசையை உள்வாங்கித் தரும் இசைப் பாட்டு, மேற்கத்தேயப் பாணியை உள்வாங்கித் தரும் இசைப்பாட்டு, கீழத்தேயத்தின் தாக்கத்தில் ஒரு பாட்டு என்று எத்தனையோ புதுமைகளைச் செய்தவர் எம்.எஸ்.வி.

இந்தச் சாதனைத் திலகத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் பின்னால் பல சுவையான சங்கதிகள் தொக்கி நிற்கும். ஓவ்வொரு இயக்குனரின் சிந்தனையோடும் , ஒளிப்பதிவாளரின் காட்சிப் பகிர்வோடும் முரண்படாது கைகோர்த்துப் பயணிக்கும் எம்.எஸ்.வியின் இசைப் பயணம்.

ஒவ்வொரு பாடகரிடம் இருந்தும் எதைப் பெறவேண்டும் என்பதையும், அதே நேரத்தில் எந்தச் சந்தர்ப்பத்தில் புதுக்குரலை அறிமுகப் படுத்தவேண்டும் என்பதையும் நன்கே தெரிந்தவர் இவர்.

"உனக்கென்ன குறைச்சல் நீயொரு ராஜா" என்று விட்டுவிடமுடியாது. இந்த எம்.எஸ்.வி என்னும் சகாப்தம் தான் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்பட வேண்டும். இந்த முனைப்பில் முதலில் சர்வேசன் தன் சிந்தனையை முதலில் தட்டிவிட்டார். தொடர்ந்துநெல்லை சிவாவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர்களோடு இணைந்து நானும் குரல் கொடுக்கின்றேன்.

இந்திய மத்திய அரசின் அங்கீகாரம் இதுவரை கிடைக்காத எம்.எஸ்.வி இற்கு பெட்டிஷன் மூலம் குரல் கொடுப்போம் வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குங்கள். இதுவரை 312 வாக்குகள் கிடைத்திருக்கின்றது. இது பல்லாயிரம் ஓட்டுக்களாகக் குவியவேண்டும் என்பதே எம் அவா.

http://www.petitiononline.com/msv2008/petition.html


இந்த வார நீங்கள் கேட்டவை பாடல்கள் அனைத்துமே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் மலரும் பாடல்களாக, சர்வேசன் மற்றும் நெல்லை சிவாவின் பதிவுகளில் மேற்கோள் காட்டிய பாடல்கள் சர்வேசனின் வேண்டுகோளுக்கிணங்க மலர்கின்றன.

முதலில் வருவது "கிருஷ்ண கானம்" என்னும் இசைத் தொகுப்பில் இருந்து "ஆயர் பாடி மாளிகையில்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடக் கேட்கலாம்.
Get this widget|Track details|eSnips Social DNA


தொடர்ந்து எனக்கு எப்போதும் பிடித்த All time favourite MSV பாட்டு "முத்தான முத்தல்லவோ" திரையில் இருந்து எம்.எஸ்.வியும் , எஸ்.பி,பாலுவும் பாடும் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்". இந்தப் பாடலில் ஸ்வர ஆலாபனை செய்வாரே எம்.எஸ்.வி அந்தப் பாகம் இவரின் சாகித்யத்துக்கு ஒர் சான்று.
Get this widget|Track details|eSnips Social DNA


அடுத்த பாடல் "பூக்காரி" திரையில் இருந்து எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸாக வந்த மு.க.முத்துவுக்காகக் குரல் கொடுக்கும் T.M.செளந்தரராஜன், எஸ்.ஜானகி "காதலின் பொன் வீதியில்" என்று பாடுகின்றார்கள்.
Get this widget|Track details|eSnips Social DNA


M.S.V யும் கே.பாலச்சந்தரும் இணைந்த Musical hit ஆன "நினைத்தாலே இனிக்கும்" திரையில் இருந்து அதே வரிகளை மட்டுமே நிறைத்துப் பாடல் பண்ணியிருக்கும் அற்புதக் கலவையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் குரல் ஜாலம் காட்டியிருக்கின்றார்கள்.
Get this widget|Track details|eSnips Social DNA


அடுத்ததாக "சிம்லா ஸ்பெஷல்" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "உனக்கென்ன மேலே நின்றாய்" என்ற பாடல் வருகின்றது.
Get this widget|Track details|eSnips Social DNA


நிறைவாக ஒரு போனஸ் பாட்டு,பாடல் இடம் பெற்ற திரைப்படம் "கீழ் வானம் சிவக்கும்" , T.M செளந்தரராஜன் பாடும் "கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான், வாழ்க்கை உண்டானதே"
இந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டேhttp://www.petitiononline.com/msv2008/petition.html">ONLINE PETITION னில் கீ நாட்டு வையுங்க.

வட்டா ;-)))
Get this widget|Track details|eSnips Social DNA

மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - இறுதிப் பாகம்

| 2 comments | Monday, June 11, 2007
|

இன்றைய பதிவிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.பாலசந்தரோடு பணியாற்றிய போது கிடைத்த அனுபவம் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் "அதிசய ராகம்" பாடலோடும்,

இயக்குனர் கே.சங்கரோடு பணியாற்றிய போது பாடலுக்கான காட்சியை எடுத்துப் பின் மெட்டுப் போட்டு பாடலான கதை, வருவான் வடிவேலன் திரைப்படத்திற்காக "பத்துமலைத் திருமுத்துக்குமரனை" பாடலோடும் இடம்பெறுகின்றது.

தகவல் குறிப்புக்கள் உதவி: ராணி மைந்தன்


மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2

| 5 comments | Tuesday, May 22, 2007
|



பிரபல பத்திரிகையாளர் ராணி மைந்தன் தொகுத்த "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்" என்ற நூலை இரண்டு வருஷம் முன் சென்னை போனபோது வாங்கியிருந்தேன். அப்புத்தகத்தில் இடம்பெற்ற அம்சங்களில் தேர்ந்தெடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்களும், அவர்களின் படங்களில் பாடல்கள் பிறந்தபோது இடம்பெற்ற சுவையான தகவல்களையும் கோர்த்து பாடல்களோடு இணைத்து வானொலி வடிவமாக்கியிருந்தேன். அதில் முதற்பாகத்தைஇங்கு தந்திருந்தேன்.
இதோ இரண்டாம் பாகம்.

இன்றைய பகுதியில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனோடு மெல்லிசை மன்னர் பணியாற்றிய படமான "கை கொடுத்த தெய்வம்" படத்தில் இடம் பெற்ற "சிந்து நதியின் மிசை" என்ற பாடல் பிறந்த கதை நகைச்சுவையான ஒரு சேதியோடு இடம்பெறுகின்றது. என்னவென்பதை அறிய ஒலிப்பதிவைக் கேளுங்கள்.

அதனைத் தொடர்ந்து பி.மாதவனின் இயக்கத்தில் வெளிவந்த "ராஜபார்ட் ரங்கதுரை" திரைப்படத்தில் இடம்பெற்ற "மதன மாளிகையில்" என்ற பாடல் உருவான போது எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பல்வேறு ரியூன்களில் ஒன்று எப்படித் தேர்வானது என்ற விசித்திரமான சம்பவத்தையும் தொட்டுச் செல்கின்றது.
இவ்விரண்டு படப்பாடல்களும் அந்தச் சுவையான சேதிகளோடு வருகின்றன.



சம்பவக் குறிப்புக்கள் நன்றி: ராணி மைந்தன்

ஒரு படப்பாடல் - மூன்று முடிச்சு

| 11 comments | Wednesday, April 18, 2007
|


இன்றைய ஒரு படப்பாடல் பகுதியிலே வடுவூர் குமார் என்ற நேயர், நீங்கள் கேட்டவை பகுதியில் கேட்டிருந்த மூன்று முடிச்சு திரைப்படப்பாடல்கள், அப்பாடல்களின் அறிமுகத்தோடு இடம்பெறுகின்றன.

இத்திரைப்படத்தில் இருந்து ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் ஜோடிக்குரலில் வசந்தகால நதிகளிலே, ஆடிவெள்ளி தேடியுன்னை ஆகிய பாடல்களும், எல்.ஆர்.ஈஸ்வரி பி.சுசீலா குரல்களில் நானொரு கதாநாயகி என்ற பாடலும் அணிசெய்கின்றன.


என் குரற்பதிவில் மூன்று முடிச்சு பாடல்கள் குறித்த அறிமுகம்


பாடல்களைக் கேட்க

மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - பாகம் 1

| 13 comments | Wednesday, March 21, 2007
|

பிரபல பத்திரிகையாளர்
ராணி மைந்தன் தொகுத்த "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்" என்ற நூலை இரண்டு வருஷம் முன் சென்னை போனபோது வாங்கியிருந்தேன். அப்புத்தகத்தில் இடம்பெற்ற அம்சங்களில் தேர்ந்தெடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்களும், அவர்களின் படங்களில் பாடல்கள் பிறந்தபோது இடம்பெற்ற சுவையான தகவல்களையும் கோர்த்து பாடல்களோடு இணைத்து வானொலி வடிவமாக்கியிருந்தேன். அதில் முதற்பாகத்தை இங்கு தருகின்றேன்.

இப்பகுதியில் மெல்லிசை மன்னரோடு இயக்குனர் ஸ்ரீதர், பந்துலு, பீம்சிங் இணைந்து பணியாற்றியபோது நடந்த சில சம்பவங்களோடு நெஞ்சம் மறப்பதில்லை படத்திலிருந்து "நெஞ்சம் மறப்பதில்லை", கர்ணன் படத்திலிருந்து "ஆயிரம் கரங்கள்", பாவமன்னிப்பு படத்திலிருந்து "வந்த நாள் முதல்" ஆகிய பாடல்கள் பிறந்த கதையும் இடம்பெறுகின்றது.



தகவற் குறிப்புக்கள் நன்றி : ராணி மைந்தன்
புகைப்படம் நன்றி: MSV Times

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக